Pages

Wednesday, February 15, 2012

450.திருநீர்மலை (Thiruneermalai) - சென்னை.

எனது 450 ஆவது இடுகை! அனைவருக்கும், அனைத்திற்கும் நன்றி!  450 ஆகத் திருநீர்மலை அமைந்தது, சிறப்பானது. 

ஆலயத் தகவல்களுக்கு முன்னால் சில அடிப்படைத் தகவல்கள். "நாராயணனே இறைவன்" என்று பாடிக் களித்த ஆழ்வார்கள் 12 பேர். ஆழ்வார்களால் குறைந்தது ஒரு பாடலாவது பாடப்பெற்ற ஆலயங்களே 108 திருத்தலங்கள் என்னும் சிறப்பைப் பெறுகின்றன.வைணவத் திருத்தலங்கள் (திவ்ய தேசங்கள்) 108. சோழ நாடு - 40, பாண்டிய நாடு - 18, நடு நாடு - 2, தொண்டை நாடு - 22, வட நாடு - 11, மலைநாடு - 13, நில உலகில் பார்க்க முடியாத தலங்கள் - 2.

இந்த ஆலயத்தைப் பாடியவர்கள், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார். நூற்றி எட்டில் இது 91 ஆவது திருத்தலம். ஸ்ரீரங்கநாதப் பெருமாள் என்ற பெயர் இருந்தாலும் உள்ளூர் மக்களால் நீர்வண்ணப் பெருமாள் கோயில் என்றே பரவலாக அறியப்படுகிறது.


நாராயணனின் சிலை வடிவத்தை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று குறிப்பிடுவார்கள். இங்கு, நான்கு நிலைகளிலும் பெருமாளைத் தரிசிக்கலாம். 

நீர்வண்ணன், (நீலமுகில்வண்ணன்), அணிமாமலர் மங்கை - நின்ற திருக்கோலம்.
சாந்த நரசிம்மன் - வீற்று இருந்த திருக்கோலம்.
ரங்கநாதன், ஸ்ரீதேவி, பூதேவி - கிடந்த திருக்கோலம்.
உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரமன்) - நடந்த திருக்கோலம். 


ஆலயத்தின் அமைப்பும், சிறப்பும்: நீரும், மலையும், மரங்களும் சூழ்ந்திருப்பதால் ரியல் எஸ்டேட்காரர்களையும் மீறி ஆலயம் பொலிவாகக் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் முகப்பாக அமைந்துள்ள காருண்ய தீர்த்தம் நிரம்பிய குளமும், நீராழி மண்டபமும், வசந்த மண்டபமும் அடுத்தடுத்து நாம் அனுபவிக்கப் போகும் அழகுகளுக்கான முன்னுரை!

மலை அடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாள், ரங்கநாதர், ஆண்டாள் சன்னதிகள்.12 ஆழ்வார்களின் சிலைகள் எழிலானவை. வெளிச்சுற்றில் அணிமாமலர் மங்கைத் தாயார், ஸ்ரீராமர் சன்னதிகள்.

ஆடுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு 200 படிகள் மேலே சென்றால் ரங்கநாதன், ரங்கநாயகி, சாந்த நரசிம்மன் மற்றும் உலகளந்த பெருமாள் சன்னதிகளைக் காணலாம்.

சிறப்புகள்:

மனித முயற்சிகளின்றி (ஸ்வயம் வ்யக்த) தானாக உருவான தலம்.


நான்கு வேதங்களின் பொருளாக நான்கு நிலைகளிலும் இறைவனைத் தரிசிக்கலாம்.

இங்கு தரிசனம் செய்தால் திருமலை, ஸ்ரீரங்கம், திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு தலங்களில் உள்ள கடவுள்களைக் கண்டதற்குச் சமம். (குறிப்பிட்ட ஆலயங்களுக்குச் செல்ல வேண்டாம் என்பது பொருளில்லை!)

நாம் இங்கு ஒரு நாள் செய்யும் புண்ணிய செயல்கள் பிற தலங்களில் பல வருடங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.

உலக இச்சைகளில் உழலும் உயிர்களுக்கு முக்தி அளிக்கும் தலம். (வளைவுகளில் விரையும் பேருந்துகள் முக்தியை நினைவு படுத்துகின்றன!)

பாடல்:

அன்றாயர்    குலக்கொடி  யோடு
             அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
               உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை
               தடந்திகழ் கோவல் நகர்
 நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்
                மாமலையாவது நீர்மலையே.  
                                                                 திருமங்கை ஆழ்வார்.

2000 வருடங்களுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட 6 மாதங்கள் காத்திருந்து பார்த்திருக்கிறார். அவ்வளவு மெய்வருத்தம் நமக்கு இருக்காது. ஆலயத்தின் வாசலுக்கே பேருந்துகள் செல்கின்றன. இயற்கைப் பின்னணிக்காகவே (ஆன்மீக நாட்டமில்லாதவர்களும்) காண வேண்டிய ஆலயம்! 


































6 comments:

  1. பார்க்க பார்க்க பரவசம் ! நல்ல பதிவு! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன்,

    நீங்கள் தரும் தொடர் உற்சாகமே இன்னும் இன்னும் எழுதுவதற்கான எரிபொருள். மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  3. அழகிய படங்களுடன், அழகிய மனதினைக் கவர்ந்த பெருமானைப் பற்றிய பதிவு அருமையாக உள்ளது.
    ஓம் நமோ நாராயணாய நாய!

    ReplyDelete
  4. Atchaya,

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  5. நேற்றும் இன்றும் இரண்டு நாள்களும் ‘இங்கே’ சென்று வரும் பாக்கியம் கிடைத்தது.

    உங்கள் பதிவிலிருந்து ஒன்றிரண்டு படங்கள் சுட்டுக்கொள்கிறேன் என் பதிவிற்கு (வித் ட்யூ க்ரெடிட்ஸ் :) )

    உங்கள் பதிவைவிட அருமை கண்களில் ஒத்திக் கொள்ள வைக்கும் அற்புதப் புகைப்படங்கள். ஹேட்ஸாஃப்!

    ReplyDelete
  6. Mr.Giri Ramasubramaniyan,

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. படங்களைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளவும்! (With due credit of course!).

    ஸ்ரீ....

    ReplyDelete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!