Pages

Monday, February 27, 2012

கவிஞனைத் தேடிய கடவுள்!

கவிஞர்கள் கடவுளைத் தேடுபவர்கள்! (ஏதோவொரு உருவில்) நான் சொல்லப்போவது கடவுள் கவிஞனைத் தேடிய வரலாற்றை! திருநின்றவூரில் கோயில் கொண்டுள்ள பக்தவத்ஸலப் பெருமாள் அல்லது பத்தராவிப் பெருமாள், (பக்தர்களின் துன்பங்களைக் களையக் காற்றைப் போல் வருபவன்.) கவிஞ்னைத் தேடியவன்!

பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் 86 ஆலயங்களுக்குச் சென்று பாடியவர். (மொத்தம் 108.) தொண்டை மண்டல ஆலயங்களைப் பாடிக் கொண்டே வரும்போது திருநின்றவூருக்கும் வருகிறார். இறைவன் கண்டுகொள்ளவில்லை. ஆழ்வாரும் அடுத்த ஆலயத்திற்குச் சென்றுவிடுகிறார்!

தாயார் (என்னைப் பெற்ற தாயார் என்ற சுதாவல்லி) பதறிப் போய் “ஆழ்வாரின் அருமையான தமிழ்ப்பாடல் பெரும் வாய்ப்பை இழந்து விட்டீர்களே! உடனே சென்று பாடல் பெற்று வாருங்கள்” என்று அனுப்ப, கவிஞனைத் தேடுகிறார் கடவுள்!

அதற்குள் ஆழ்வார் திருக்கடன்மல்லைப் பெருமாளைப் (மாமல்லபுரம்) பாடிக் கொண்டிருக்கிறார். பக்தவத்ஸலன் தம்மைப் பாடுமாறு வேண்டுகிறார். அப்போது திருமங்கை மன்னன் பாடிய அற்புதமான பாடல்!

ஏற்றினை இமயத்துளெம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும் ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய கூற்றினை குருமாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை காற்றினைப் புணலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்.

மனைவியிடம் ஓடிவந்து பாடல் வாங்கியதைச் சொல்கிறார். அவளுக்குச் சம்மதமில்லை. மீண்டும் கவிஞனைத் தேடிவருகிறார். திருக்கண்ணமங்கைப் பெருமாளைப் பாடிக் கொண்டிருந்த திருமங்கை ஆழ்வார் இவர் வந்ததை அறிந்து இவரையும் பாடலில் இணைத்துப் பாடினார். “மற்ற தலங்களுக்கு எத்தனையோ பாடல்கள் இருக்க உங்களுக்கு ஒரு பாட்டுத்தானா?” என்று திரு அதிர்ந்து நின்ற ஊர் “திருநின்றவூர்”!

       மூலவர்                    :     பத்தராவிப்பெருமாள்
      அம்மன்/தாயார்      :     என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி
      பழமை                        :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராணப் பெயர்        :     தின்னனூர்
      ஊர்                               :     திருநின்றவூர் (Thiruninravur)
      மாவட்டம்                 :     திருவள்ளூர் (Thiruvallur)

ஆலயத்தின் சிறப்புகள்:

 திருமணத் தடை நீங்கும்.

ஆதிசேஷனுக்குத் தனியாக சன்னதி உள்ளது. வழிபடுவோர்க்கு ராகு, கேது இதர சர்ப்ப தோஷம் விலகும். 

மாங்கல்யம் நிலைக்கும். 

மிகச் சிறப்பான முறையில் பராமரிக்கப்படும் ஆலயம். மூலவரைப் பக்கத்தில் பார்க்க முடியாதது மட்டுமே குறை! மற்றபடி சிறிய, சிறப்பான, எழில்மிகுந்த கோவில்!



















































2 comments:

  1. நண்பரே உங்கள் பதிவு இணைக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  2. கூகிள்சிறி,

    இணைத்ததற்கு மனமார்ந்த நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete

தங்களின் மேலான மறுமொழிகள் இங்கே!